சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சியை சேர்ந்த விவசாயி செல்வம் (45), தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு இலவச மின்இணைப்பு பெற தடையில்லா சான்று கேட்டு, புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். நேற்று முன்தினம் பிடிஓ அலுவலக கார் டிரைவர் பிரபாகரன் (50), செல்வத்தின் தோட்டத்திற்கு வந்து ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் செல்வத்திடம் தடையில்லா சான்று வழங்க ₹1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் செல்வம் புகார் தெரிவித்தார். பின்னர் போலீசார் தந்த ரசாயன பவுடர் தடவிய 1000 ரூபாய் நோட்டுகளை, டிரைவர் பிரபாகரனிடம் நேற்று காலை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.